சென்னை: “தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டிற்கு பெரும் ஆபத்து” ஏற்பட்டுள்ளதாக அனைத்துக் கட்சிகளுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத்துக்கட்சிகளுக்கும் நேற்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: 2026ம் ஆண்டு வரையிலும், 1971ம் ஆண்டு மக்கள் தொகையின் அடிப்படையிலேயே மக்களவை தொகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
மக்கள் தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை, மாநிலங்கள் முனைப்போடு மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருந்தாலும், இந்த இலக்கை அடைவதில் அனைத்து மாநிலங்களின் செயல்பாடுகளும் ஒரே அளவில் இல்லை. தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள், மக்கள் தொகை வளர்ச்சி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் முழுமையாக ஈடுபட்டதால் தான், இந்த வளர்ச்சி கணிசமாகக் குறைந்துள்ளது.
இத்தகைய முன்முயற்சிகள்தான், நாட்டின் மொத்த மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தி, நாடு வளர்ச்சி அடைவதற்கான முக்கிய காரணமாகவும் இருந்து வருகின்றன. எனவே, மக்கள்தொகையை கட்டுப்படுத்தி, நாட்டின் வளர்ச்சியிலும் பெரும்பங்காற்றி வரும் நமது மாநிலத்தை, தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் ஒன்றிய அரசு தண்டிக்க நினைப்பது எவ்வகையிலும் ஏற்கத்தக்கது அல்ல.
தற்போதைய மக்கள்தொகையின் அடிப்படையில், மக்களவை தொகுதிகளின் மறுசீரமைப்பை இரண்டு விதமான முறைகள் மூலம் மேற்கொள்ள கருதப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல் முறையின் கீழ், ஏற்கனவே உள்ள தொகுதிகளின் எண்ணிக்கையின்படி, தற்போதைய மக்கள்தொகையின் அடிப்படையில் மறுசீரமைப்பு செய்தால், தமிழ்நாடு 8 மக்களவை தொகுதிகளை இழக்க வேண்டியிருக்கும். இரண்டாவது முறையின்படி, மொத்த மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 848 ஆக உயர்த்தி, தற்போதைய மக்கள்தொகையின் அடிப்படையில் மறுசீரமைப்பு செய்தால், நமக்கு கூடுதலாக கிடைக்க வேண்டிய 22 தொகுதிகளுக்கு பதிலாக, 10 தொகுதிகள் மட்டுமே கிடைத்து, 12 தொகுதிகளை நாம் இழக்க வேண்டிய நிலை ஏற்படும்.
எனவே, எவ்வகையில் பார்த்தாலும், தமிழ்நாட்டுக்குப் பேரிழப்பு ஏற்படும் வாய்ப்பே நம் முன்நிற்கிறது. தற்போதைய மக்களவை தொகுதிகள் எண்ணிக்கையின் அடிப்படையில்கூட பல்வேறு நியாயமான கோரிக்கைகளை, தமிழ்நாடு பெற இயலவில்லை. ஒன்றிய அரசின் அதிகாரக் குவிப்பு, ஒன்றிய அரசு சார்ந்த திட்டங்களில் நிதி குறைக்கப்படுவது அல்லது விடுவிக்கப்படாமல் தடுப்பது, ஒன்றிய அரசு அதிகாரத்தில் நமது பிரதிநிதித்துவம் குறைந்து வருவது, நிதிப்பகிர்வில் காட்டப்படும் பாரபட்சம் என அனைத்து வகைகளிலும், தமிழ்நாட்டின் உரிமைகளும், சுயாட்சியும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றன.
இந்த சூழ்நிலையில், நமது மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை மேலும் குறைக்கப்பட்டால், தமிழ்நாட்டின் குரல்வளை முழுமையாக நசுக்கப்படும். மக்களவை தொகுதி மறுசீரமைப்பு நடந்தால், இப்பிரச்னைகளுக்கு எதிராக கிளர்ந்து, நமது தனித்துவத்தைப் பாதுகாப்பதற்கான ஆற்றலும், அதிகாரமும் இல்லாத நிலை ஏற்படும் அபாயத்தை நாம் எதிர்நோக்கியுள்ளோம். எனவே, இந்த கடுமையான விளைவுகளைக் கருத்தில் கொண்டு, மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு முறையானது,
நமது மாநிலத்தைப் பாதிக்காத வகையில் செயல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் அல்லது இந்த முயற்சி நமது கூட்டாட்சிக் கட்டமைப்பை முழுமையாகச் சிதைப்பதற்கு முன்பாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இதற்கான முயற்சிகளை முன்னெடுக்க நமக்கு குறைந்த அளவு கால அவகாசமே இருப்பதால், நாம் அனைவரும் ஒன்றாகக் கைகோர்க்க வேண்டிய காலமிது. இந்த கூட்டு முயற்சிக்கு உங்களது ஒத்துழைப்பைக் கோருகிறேன்.
நாம் அனைவரும் ஒன்றாக கலந்தாலோசித்து, நமது மாநிலத்தின் நலன் காப்பதற்கான ஒருமித்த கருத்துகளின் அடிப்படையில், தகுந்த உத்திகளைத் தீட்டிச் செயல்படுத்திட தங்களுக்கு இத்தருணத்தில் அழைப்பு விடுக்கிறேன். இது தொடர்பாக, மார்ச் 5ம் தேதி காலை 10 மணியளவில் தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகை, 10வது தள கூட்ட அரங்கில், நாம் அனைவரும் கலந்தாலோசிக்கலாம் என கருதுகிறேன். கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது மேலான கருத்துகளை தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
* தமிழ்நாட்டில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை மேலும் குறைக்கப்பட்டால், தமிழ்நாட்டின் குரல்வளை முழுமையாக நசுக்கப்படும்.
The post மக்களவை தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டிற்கு பெரும் ஆபத்து: அனைத்து கட்சிகளுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.