சென்னை: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று வெளியிட்ட அறிக்கை: திருநெல்வேலி, தென்காசி மற்றும் விருதுநகர் ஆகிய தென் மாவட்டங்களுக்கு கூட்டு குடிநீர் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் குடிநீரானது மாசுபட்டிருப்பதாகவும், உறை கிணறுகளுக்கு பதிலாக தாமிரபரணி ஆற்றில் இருந்து நேரடியாக எடுக்கப்படும் குடிநீரால் மக்கள் அவதியுறுவதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த மன வேதனையளிக்கின்றன. இயற்கையாகவே அசுத்தங்களை வடிகட்டி குடிநீரை சுத்திகரிக்கும் அமைப்பு கொண்ட உறை கிணறுகள், திறந்தவெளி மலம் கழித்தல், கழிவுகளை கொட்டுதல் மட்டுமன்றி ஒப்பந்ததாரர்களின் மெத்தனப்போக்கால் அக்கிணறுகள் முற்றிலுமாக சேதமடைந்திருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல்லாவரத்தில் கழிவுநீர் கலந்த குடிநீரால் 3 பேர் உயிரிழந்த சோகத்தையே தமிழகம் இன்னும் மறக்கவில்லை. கோடை வெயில் வாட்டி வதைக்கையில் சுத்தமான குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவுவது ஆபத்தானதல்லவா?. எனவே இதுகுறித்த உயர்மட்ட விசாரணையை உடனடியாகத் துவங்குவதோடு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் செயல்பாட்டையும் சீர் செய்து மக்களுக்கு சுத்தமான குடிநீர் தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டுமென தமிழக முதல்வரை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post மக்களுக்கு சுத்தமான குடிநீர் தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்: பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.