சென்னை: மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால், தென் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது பாதிக்கப்படும். இதுகுறித்து திமுக மருத்துவரணி செயலாளர் டாக்டர் எழிலன் எம்எல்ஏ சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று அளித்த பேட்டி: வருகின்ற மார்ச் 22 தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பல மாநிலங்களைச் சேர்ந்தவர்களை தொகுதி மறுசீரமைப்பு குறித்து கலந்தாய்வு செய்ய தமிழ்நாட்டிற்கு அழைப்பு விடுத்து இருக்கிறார். சென்ற வாரம் பல்வேறு குழுக்கள் அமைத்து, தமிழ்நாடு அமைச்சர்கள்-எம்பிகள் என பல்வேறு மாநிலங்களுக்கு சென்று, இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்த அழைப்பை ஏற்று கேரளாவிலிருந்து பினராய் விஜயன், கோவிந்த், பினாய் விஷ்வம், கும்பகடி சுதாகரன், கேரள காங்கிரஸ் பி.ஜே.ஜோசப், கேரள காங்கிரஸ் ஜோசப் மணி, எம்.கே.பிரேம சந்திரன்; ஆந்திராவிலிருந்து மிதுன் ரெட்டி, தெலங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி, கே.டி.ராமராவ், வினோத் குமார் எம்.பி.; கர்நாடாகாவிலிருந்து துணை முதல்வர் சிவகுமார் முதலான பலர் பங்கேற்க உள்ளனர். தமிழ்நாட்டிற்கு தொகுதி குறையாது, இடம் குறையாது என சொல்கிறார்கள்.
ஆனால் சதவிகிதம் உயர்கிறது, புரோரேட்டா என்பது எதன் அடிப்படையில் என்றுதான் கேட்கிறோம். 2026 மக்கள் தொகை அடிப்படையில் 840 இடங்கள் இருந்தால், உத்திரபிரதேசத்தின் இடங்கள் 80லிருந்து 143 இடங்களாக அதிகரிக்கிறது. பீகாரின் இடங்கள் 40லிருந்து 79 இடங்கள் அதிகரிக்கிறது. மத்திய பிரதேசத்தின் இடங்கள் 29லிருந்து 52 இடங்கள் அதிகமாகிறது. ஆனால், தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களில் தொகுதி எண்ணிக்கை அதே அளவில் குறைவாகத்தான் இருக்கும்.
மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற எண்ணிக்கை அதிகப்படுத்தினால், தென் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி பயங்கரமாக பாதிக்கப்படும். 10வது நிதி குழுவிலிருந்து 15வது நிதிக்குழு வரை, கர்நாடகாவிற்கு 5.9ல் இருந்து 3.6% தான் வரிகளின் பகிர்வாக இருக்கிறது. கேரளாவிற்கு 3.9 ஆக இருந்து 1.9 ஆக குறைந்துள்ளது, தமிழ்நாட்டிற்கு 6.6ல் இருந்து 4.08 ஆக குறைந்துள்ளது.
இதனால் ஒரு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கிடு செய்யும் போது அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ப குறைக்கப்படுகிறது. ஆனால், தென் மாநிலங்கள் இந்த நாட்டின் வளர்ச்சிக்கு 30ல் இருந்து 40% விகிதங்கள் கொடுக்கிறார்கள். இவற்றை உணர்ந்துதான் முதல்வர் மு.க.ஸ்டாலின் களம் அமைக்கிறார். நியாயத்தை கேட்கிறார். ஒன்றிய அரசுக்கு கேட்க வைக்கும் முயற்சியாக தான் வருகின்ற கூட்டத்தைப் பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
The post மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால் தென் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதும் பாதிக்கப்படும் appeared first on Dinakaran.