*கலெக்டர் வழங்கினார்
ஈரோடு : வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தார். இதில், முதியோர், விதவை, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட உதவித்தொகைகள் கேட்டும், வீட்டுமனைப்பட்டா, கல்விக்கடன், அடிப்படை வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 203 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்றன. மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
மேலும், முதலமைச்சரின் தனிப்பிரிவு, அமைச்சர்களின் முகாம் மனுக்கள் மற்றும் மக்கள் குறைதீர்க்கும் முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்தும் ஆய்வு செய்தார். மேலும், இக்கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு தலா ரூ.5,600 வீதம், ரூ.28,000 மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்கள், 5 பயனாளிகளுக்கு ரூ.6,700 வீதம் ரூ.33,500 மதிப்பிலான விலையில்லா சலவை பெட்டிகள், 10 பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் என மொத்தம் 20 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.61,500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வழங்கினார்.
மேலும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் சார்பில் செயல்படும் விடுதிகளை நன்முறையில் நிர்வகிக்கும் பொருட்டு முதல் 3 இடங்களை பெற்ற காப்பாளர்களுக்கு ரூ.10,000, ரூ.5,000, ரூ.3,000த்துக்கான காசோலைகள், பாராட்டுச் சான்றிதழ்கள், கேடயங்களையும் அவர் வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் செல்வராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார், மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலர் ராஜகோபால், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் நூர்ஜஹான், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பூபதி உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post மக்கள் குறைதீர் கூட்டத்தில் 20 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் appeared first on Dinakaran.