திருச்சி: திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும் மதிமுக முதன்மைச்செயலாளருமான துரை வைகோ திருச்சியில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: வைகோ 1978ஆம் ஆண்டு 34ஆம் வயதில் நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைத்தார். மூன்று முறை மத்திய அமைச்சர் பதவி தேடி வந்த பொழுதும் அதை மறுத்தவர் வைகோ. அந்த தலைவருக்கு மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக வாய்ப்பு அளிக்காதது எங்களுக்கு வருத்தமும், வேதனையும் அளிக்கிறது. தமிழ்நாட்டு நலன் கருதி நாங்கள் அதை கடந்து செல்வோம்.
கூட்டணியில் தொடருவோம். தமிழ்நாட்டின் நலனுக்காக கூட்டணியில் இணைந்து பணியாற்றுகிறோம். பொன் குடம் உடைந்தாலும் அது பொன் குடம் தான். பாராளுமன்ற புலி வைகோ தான். வைகோவிற்கு பதவி ஒரு பொருட்டல்ல, மக்கள் பணி எப்போதும் தொடரும். சட்டமன்ற தேர்தலில் வைகோ போட்டியிடுவது குறித்து அவரும், கட்சி தலைமையும் தான் முடிவெடுப்பார்கள்.
தமிழ்மொழி தான் முதல் மொழி என்பதை மொழியியல் அறிஞர்கள் கூறியுள்ளார்கள். இது குறித்து கமல் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை. தற்போது அந்த விவகாரம் அரசியலாக்கப்படுகிறது. ராமதாசுக்கும் அன்புமணிக்கும் இடையே உள்ள பிரச்சனை அவர்கள் கட்சி சார்ந்தது. அதில், நான் கருத்து கூறுவது ஆரோக்கியமானதாக இருக்காது. நான் கருத்து கூறுவது நாகரிகமற்றது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post மக்கள் பணி எப்போதும் தொடரும் வைகோவிற்கு பதவி பொருட்டல்ல: துரை வைகோ எம்பி பேட்டி appeared first on Dinakaran.