சென்னை: கடலூர் மாவட்டம் வேப்பூர் தாலுகா மேமாத்தூர் வழியாக ஓடும் மணிமுத்தாற்றின் குறுக்கே மேம்பாலம் இல்லாததால், மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமல் தவிப்பதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில் 4 மாதங்களில் பணியைத் தொடங்க ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், கடலூர் மாவட்டம் மேமாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞரான ஆர். சுதாகர் தாக்கல் செய்திருந்த மனுவில், “கடலூர் மாவட்டம் வேப்பூர் தாலுகா, நல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேமாத்தூர் கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். எங்கள் கிராமத்துக்கு மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி மணிமுத்தாறு ஓடுகிறது. இந்த ஆற்றைக் கடந்தே நல்லூர், வேப்பூர் மற்றும் விருத்தாச்சலம் போன்ற வெளியூர்களுக்கு செல்ல வேண்டிய சூழல் உள்ளது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் தண்ணீர் வரத்து குறையும் வரை மாதக்கணக்கில் கிராமத்தை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகிறோம்.