தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத திரைப்படங்களான ‘ரமணா’, ‘கஜினி’, ‘துப்பாக்கி’ போன்றவற்றை கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ், கடைசியாக தமிழில் எடுத்த ’சர்கார்’, ‘தர்பார்’ ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்தியில் சல்மான் கானை வைத்து அண்மையில் ‘சிக்கந்தர்’ என்ற படத்தை கொடுத்தார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் பெரும் தோல்வியை தழுவியது. ஓர் உறுதியான கம்பேக்-ஐ கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் முருகதாஸ், ‘அமரன்’ வெற்றிக் களிப்பில் இருந்த சிவகார்த்தியனை வைத்து இயக்கியுள்ள படம்தான் ‘மதராஸி’. தனக்கு மிகவும் தேவைப்படும் அந்த ‘கம்பேக்’-ஐ முருகதாஸ் இந்த படத்தின் மூலம் கொடுத்தாரா என்பதை பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் துப்பாக்கிக் கலாச்சாரத்தை புகுத்தும் நோக்கி ஐந்து கன்டெய்னர் லாரிகள் முழுக்க துப்பாக்கிகளுடன் ஒரு கும்பல் நுழைவதாக என்ஐஏ அதிகாரியான பிஜு மேனனுக்கு தகவல் கிடைக்கிறது. அவர்களை தடுக்கும் நோக்கி அதிகாரிகள் தோல்வி அடைகின்றனர். ஆயுதங்கள் அடங்கிய அந்த கன்டெய்னர்கள் ஒரு கேஸ் ஃபேக்டரிக்கு கொண்டு செல்லப்படுகின்றன.