மதுரை: மாநகர முக்கிய சாலைகளில் விளம்பர பலகைகளை வைக்கும் விளம்பர நிறுவனங்களே, அந்த சாலைகளில் புதிய தெருவிளக்குகளை நிறுவி பராமரித்து, அதற்கான மின்கட்டணத்தையும் செலுத்தும் வகையில் மதுரை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டில் மதுரை மாநகராட்சியின் எல்லை 142 ச.கி.மீ-ஆக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சியில் 265 கி.மீ. பேருந்து வழித்தட சாலைகள் உட்பட மொத்தம் 1,545 கி.மீ. நீளத்துக்கு சாலைகள் உள்ளன. இச்சாலைகளில் மொத்தமே 60,000 தெருவிளக்குகள் மட்டுமே உள்ளன. அதனால் முக்கிய சாலைகள் தவிர குடியிருப்புகள், சாதாரண சாலைகளில் போதுமான தெருவிளக்குகள் இல்லை என்றும், அவற்றின் பராமரிப்பும் மோசமாக இருப்பதால் சாலைகள் இருளில் மூழ்கி நள்ளிரவு வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு சமூகவிரோத செயல்கள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.