சென்னை: கட்டணமில்லா விடியல் பேருந்து பயணத்திட்டம், மலைப் பகுதிகளில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்பது உட்பட 9 அறிவிப்புகளை சுதந்திர தின உரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
நாட்டின் 79-வது சுதந்திர தினத்தையொட்டி, புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் பேசியதாவது: நாட்டுக்காக உழைத்த தியாகிகளைப் போற்றும் அரசே திமுக அரசு. சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவிடங்களில் ஒலி-ஒளி காட்சிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காந்தி மண்டபம், அருங்காட்சியகம், பெருந்தலைவர் காமராஜர் மண்டபம், பெரியவர் பக்தவத்சலம் மண்டபம் ஆகியவற்றை மேம்படுத்த ரூ.3.36 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களுக்காக ‘காக்கும் கரங்கள்’ திட்டத்தை வரும் 19-ம் தேதி தொடங்கி வைக்க உள்ளேன்.