சென்னை சூளைமேடு வீரபாண்டி நகரில் திறந்து கிடந்த மழைநீர் கால்வாயில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அந்த வழியாக நடந்து சென்றபோது மழைநீர் கால்வாய் திறந்து கிடப்பதை கவனிக்காமல் உள்ளே விழுந்திருக்கலாம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
இச்சம்பவத்தை அறிந்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன், மழைநீர் கால்வாய் நீண்டகாலமாக மூடப்படாமல் இருப்பது குறித்தும், அப்பகுதியில் மின்விளக்குகள் சரியாக எரியாமல் இருப்பது குறித்தும் சென்னை மாநகராட்சி மற்றும் மின்சாரத் துறையினருக்கு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர். அரசு அமைப்புகள் எந்த அளவுக்கு அலட்சியமாக நடந்து கொள்கின்றன என்பதற்கு உதாரணமாக இந்த அலட்சியப் போக்கு அமைந்துள்ளது.