கடந்த 2024-ம் ஆண்டில் சென்னை மாநிலக் கல்லூரி மாணவர் ஒருவரை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் நால்வர் கொலை செய்ததாக பதிவான வழக்கில் அந்த 4 மாணவர்கள் தரப்பில் இருந்து ஜாமீன் கேட்டு விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. இந்த ஜாமீன் வழக்கை கையாண்ட நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்வைத்துள்ள சில பரிந்துரைகள், ஒட்டுமொத்த சமூகத்தின் மனசாட்சியை வெளிப்படுத்தும் குரலாகவே அமைந்துள்ளது.
மாநிலத்தின் குற்றப்பதிவு பிரிவு வெளிப்படுத்தும் அறிக்கைகளின்படி பார்த்தால் கடந்த 10 ஆண்டுகளில் மாணவர்கள் அரங்கேற்றிய தீவிரமான குற்றங்கள் மட்டுமே 231 வழக்குகளாக பதிவாகி உள்ளன. இதில் 58 வழக்குகள் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மட்டுமே தொடர்புடையவை. 28 வழக்குகள் மாநிலக் கல்லூரி மாணவர்கள் மீதானவை.