சென்னை: பள்ளி செல்லும் பெண் குழந்தைகளைப் பாதுகாப்பதில் திமுக அரசு முற்றிலுமாகத் தோல்வி அடைந்து விட்டது என குற்றம் சாட்டியுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பள்ளி மாணவ, மாணவியர் பாதுகாப்பை உறுதி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்காத பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "புதுக்கோட்டை மாவட்ட அரசுப் பள்ளியில், மாணவிகள் 7 பேருக்குப் பாலியல் தொல்லை அளித்த பள்ளி உதவித் தலைமையாசிரியர் கைது செய்யப்பட்டிருக்கிறார். தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி மாணவிகள் தொடர்ந்து பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.