கள்ளக்குறிச்சி: கடலூர் மாவட்டம் பெரியநெசலூரை சேர்ந்தவர் ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி(17). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் பிளஸ்2 படித்து வந்தார். இந்நிலையில் இவர் கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் 13ம் தேதி பள்ளி விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இவருடைய மரணத்திற்கு நீதி கேட்டு பல்வேறு அமைப்புகளை சேர்ந்த இளைஞர்கள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறி வன்முறையில் முடிந்தது. இந்நிலையில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே பள்ளி நிர்வாகத்தினர் மீது போடப்பட்ட வழக்கின் எப்ஐஆர் நகல், சிசிடிவி காட்சிகள், ஆடியோ உரையாடல் பதிவுகள் ஆகியவற்றை கேட்டும், மரண வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆசிரியர்கள் இருவரை வழக்கில் சேர்க்க கோரியும் இறந்த மாணவி மதியின் தாயார் செல்வி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு நேற்று கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி மற்றும் அவரது வழக்கறிஞர் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி ராம் விசாரணையை ஏப்ரல் 24ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
The post மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு விசாரணை ஒத்திவைப்பு appeared first on Dinakaran.