சென்னை: மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்கவும், மத்திய – மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்தவும் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்படுகிறது என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீ்ழ் அறிவித்தார். முன்னதாகவே அதிமுக வெளிநடப்பு செய்த நிலையில், முதல்வரின் அறிவிப்பை ஏற்க மறுத்து பாஜகவும் வெளிநடப்பு செய்தது.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று 110-ன் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு பேசியதாவது: இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் மிகப்பெரும் பொறுப்பை மாநிலங்கள் ஏற்று கொண்டுள்ளன. கல்வி, சுகாதாரம், ஊரக வளர்ச்சி, நகர்ப்புற மேம்பாடு என அனைத்தையும் மாநிலங்கள் முன்னெடுத்துச் செல்கின்றன. ஆனால் அவற்றையெல்லாம் நிறைவேற்ற தேவையான அதிகாரங்கள் மாநிலங்களிடம் இருந்து பறிக்கப்பட்டு மத்திய அரசிடம் குவிக்கப்பட்டு வருகின்றன.