வாஷிங்டன்: இந்தியா, சீனா உள்பட அமெரிக்கா பொருட்களுக்கு அதிக வரிவிதிக்கும் நாடுகளுக்கு ஏப்.2 முதல் பரஸ்பர வரிவிதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்து இருந்தார். அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்திலும் அதிபர் டிரம்ப் இதைப்பற்றி தெரிவித்து இருந்தார். தற்போது ஓவல் அலுவலகத்தில் அதற்கான உத்தரவில் அவர் கையெழுத்திட்டுள்ளார். அப்போது அவர் கூறியதாவது: பரஸ்பர வரிவிதிப்பு ஏப்.2 முதல் அமலாகும் போது மிகப்பெரிய மாற்றம் இருக்கும். அது இந்தியா, சீனா அல்லது ஏதேனும் ஒரு நாடு இருந்தாலும் எந்த மாற்றமும் இருக்காது. பரஸ்பர வரி நிச்சயம் விதிக்கப்படும். இந்தியா மிகவும் அதிக வரி விதிக்கும் நாடு. அதே போல் அமெரிக்க பொருட்கள் அத்தனைக்கும் அதிக வரி விதிக்கும் நாடு எது என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன், அது கனடா. எங்களின் பால் பொருட்கள் மற்றும் பிற பொருட்களுக்கு கனடா எங்களிடம் 250% வசூலிக்கிறது. மரக்கட்டைகள் மற்றும் அது சம்பந்தப்பட்ட பொருட்களுக்கு மிகப்பெரிய வரி விதிக்கிறது. எங்களுக்கு அவர்களின் மரக்கட்டைகள் தேவையில்லை. அவற்றை விட எங்களிடம் அதிக மரக்கட்டைகள் உள்ளன. கனடாவின் மரக்கட்டைகள் எங்களுக்குத் தேவையில்லை. இவ்வாறு தெரிவித்தார்.
* எச்சரிக்கையுடன் செயல்படுவோம்
டிரம்ப் அறிவிப்பு குறித்து ஒன்றிய அரசு கூறுகையில்,’ அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள பரஸ்பர வரிவிதிப்பின் அறிவிப்பு தொடர்பாக இந்தியா எச்சரிக்கையாக செயல்படும். இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் சுங்க வரி மற்றும் வரி அல்லாத தடைகளை குறைப்பது உட்பட அமெரிக்காவுடனான வர்த்தக உறவுகளை ஆழப்படுத்துவது குறித்து இந்தியா ஆலோசித்து வருகிறது. இந்தப் பிரச்சினைக்கு இணக்கமான தீர்வை எதிர்பார்க்கிறோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
The post மிக அதிக வரி விதிக்கும் நாடு இந்தியா மீது டிரம்ப் மீண்டும் பாய்ச்சல் appeared first on Dinakaran.