மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவுக்கும் முதன்மைச் செயலாளர் துரை வைகோவுக்கும் இடையில் நடக்கும் அரசியல் அதிகார யுத்தத்தின் உச்சக் கட்டமாக முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து தாமாகவே விலகி இருக்கிறார் துரை வைகோ. கட்சியின் நிர்வாகக் குழு கூட்டம் இன்று (ஏப்ரல் 20) நடைபெறும் நிலையில் துரையின் இந்த முடிவு மதிமுக-வுக்குள் பெரும் புகைச்சலை உண்டாக்கி இருக்கிறது.
மகனின் இந்த முடிவு தமக்கு அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்திருக்கிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. ஆனால், இதெல்லாமே மல்லை சத்யாவை வெளியேற்றுவதற்காக நடக்கும் ஒத்திகை என்கிறார்கள் நடுநிலையான மதிமுக-வினர். திமுக-வில் வாரிசு அரசியல் நடப்பதாகச் சொல்லி மதிமுக-வை உருவாக்கிய வைகோ, “எக்காலத்திலும் என் மகனோ, என் தம்பியோ தாயகத்தின் பக்கம் தலைவைத்துப் படுக்கமாட்டார்கள். இது எனது அம்மாவின் மீது ஆணை… பேரறிஞர் அண்ணாவின் மீது ஆணை” என்று சொன்னார்.