காஞ்சிபுரம்: சாம்சங் நிர்வாகம் பணியில் சேர்த்து கொள்வதாக அறிவித்ததைத் தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த சாம்சங் ஊழியர்கள் போராட்டம் இன்று முடிவுக்கு வந்தது. தொழிலாளர்கள் வைத்த கோரிக்கைகள் ஏதும் நிறைவேற்றப்படாத நிலையில் பலர் பணிக்கு திரும்ப முடிவு செய்த நிலையில் மற்றவர்களும் போராட்டத்தை முடித்துக் கொண்டதாக ஊழியர்கள் சிலர் தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கி வரும் சாம்சங் இந்தியா தொழிற்சாலையில் பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு சிஐடியு தொழிற்சங்கத்துக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது. இதனிடையே பணி நேரத்தில் ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 23 சிஐடியு தொழிற்சங்க ஊழியர்களை சாம்சங் நிர்வாகம் தற்காலிக இடைநீக்கம் செய்தது.