புதுச்சேரி: “முதலீட்டாளர்கள், தொழிலதிபர்கள், தொழிலாளர்கள் சுமுக உறவை பேண வேண்டும். அமர்ந்து சமரசம் பேசி உடன்பாடு ஏற்படுத்த வேண்டும். சேதராப்பட்டு கரசூரில் புதிய தொழிற்சாலைகளை கொண்டுவர உள்ளோம். இதன்மூலம் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்” என்று முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.
புதுவை அரசின் தொழிலாளர் துறை சார்பில் தொழில் நல்லுறவு குறித்த ஒருநாள் பயிற்சி முகாம் கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லுாரி கருத்தரங்கு கூடத்தில் இன்று (பிப்.28) நடந்தது. முகாமை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்து பேசியது: “புதுவையில் சிறு, குறு தொழிற்சாலைகள் 1,500 உள்ளன. இதில் 85 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பெரிய தொழிற்சாலைகள் சில வெளியேறிவிட்டன. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சலுகை நிறுத்தம், தொழிலாளர் பிரச்சினை ஆகியவற்றால் பெரிய தொழிற்சாலைகள் வெளியேறியுள்ளன. இதனால் வேலைவாய்ப்பு குறைந்து வருகிறது.