
1957-ஆம் ஆண்டு, அன்றைய ஒன்றுபட்ட ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூரில் இரு சமூகங்களுக்கிடையே பிரச்சினை ஏற்பட்டது. ஒரு பக்கம் முக்குலத்தோர்; மறுபுறம் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர். இரண்டு சமுதாய மக்களையும் சமாதானப்படுத்த ஊர் முக்கியஸ்தர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் பலன் அளிக்கவில்லை. பிரச்சினை தீவிரமடைந்தது. அதைத் தொடர்ந்து செப்டம்பர் 10-ம் தேதி சமாதானக் கூட்டத்துக்கு ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஏற்பாடு செய்தார். பசும்பொன் தேவர் அக்கூட்டத்தில் பங்கேற்றார். அதேபோல், இரண்டு சமுதாயங்களைச் சேர்ந்த முக்கியஸ்தர்களும் பங்கேற்றனர்.
அந்தக் கூட்டத்தில் பசும்பொன் தேவர் பேசும்போது, “எல்லா மக்களும் நம் மக்கள்தான். ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்ளக் கூடாது. எல்லோரும் அமைதியாக வாழ வேண்டும். யாருக்கும் எந்தத் தொந்தரவும் கொடுக்கக் கூடாது” என்று மக்கள் சமரசமாகப் போகும்படி வலியுறுத்தினார்.

