ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு வகையான காட்டுச்செடிகளில் மலர்கள் பூத்து சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. குறிப்பாக ஜெகரண்டா, செர்ரி, பிளேம் ஆப் தி பாரஸ்ட், சேவல் கொண்டை மலர்கள் மற்றும் ரெட் லீப் உள்ளிட்ட மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை மசினகுடி, முதுமலை, சிறியூர், சிங்காரா போன்ற பகுதிகளில் பனி பொழிவு அதிகமாக இருக்கும்.
இதனால், அந்த வனப்பகுதிகளில் செடி, கொடிகள், புற்கள், மரங்கள் ஆகியன காய்ந்து விடுவது வழக்கம். இதில், கோடை காலத்தை வரவேற்கும் விதமாக பிப்ரவரி மாதங்களில் மசினகுடி, முதுமலை வனப்பகுதியில் ‘பிளேம் ஆப் தி பாரஸ்ட்’ எனப்படும் அறிய வகை மலர்கள் மரங்களில் பூப்பது வழக்கம்.
இந்த மலர்கள் தொலை தூரங்களில் இருந்து பார்க்கும் போது நெருப்பு பந்துகள் போல் காட்சியளிக்கும். இதன் காரணமாகவே இந்த மலர்களுக்கு இப்பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது முதுமலை, மசினகுடி, சிங்காரா, மாயார், சிறியூர் போன்ற வனப்பகுதிகளில் இந்த பிளேம் பாரஸ்ட் சிவப்பு நிற மலர்கள் அதிகளவு பூத்துள்ளன. இந்த அரிய வகை மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.
The post முதுமலை பகுதியில் பூத்துக்குலுங்கும் ‘பிளேம் ஆப் தி பாரஸ்ட்’ மலர்கள் appeared first on Dinakaran.