திருவாரூர்: மும்மொழி விவகாரத்தை திசை திருப்பவே டாஸ்மாக் அலுவலகம், குடோன்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக அரசின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாக ஆய்வு செய்து வருகிறார். அதன்படி நேற்று திருவாரூரில் நேற்று ஆய்வு மேற்கொண்ட அவர், இரவு சன்னதி தெரு இல்லத்தில் தங்கினார். தொடர்ந்து இன்று 2வது நாளாக ஆய்வு மேற்கொண்டார்.
காலை 9.30 மணியளவில் திருவாரூர் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்து துறை அரசு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு துறை வாரியாக நடைபெறும் வளர்ச்சி பணிகள் பற்றி கேட்டறிந்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: திருவாரூரில் 2 நாளாக ஆய்வு நடந்துள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முதல்வர் உத்தரவின்படி 4 அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் மும்மொழி கொள்கை திணிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம் போன்ற பிரச்னைகள் இருந்து வரும் நிலையில் இதனை திசை திருப்புவதற்காக ஒன்றிய அரசு, டாஸ்மாக் தலைமை அலுவலகம், குடோன்களில் தனது ஏஜெண்டான அமலாக்கத்தறை மூலம் சோதனை நடத்தி பிரச்னையை திசை திருப்ப முயன்று வருகிறது. நீட் தேர்வுக்காக 1 கோடி கையெழுத்தியக்கம் திமுக சார்பில் பெறப்பட்டபோது, பள்ளி மாணவர்களை தவிர்த்து தான் கையெழுத்து பெறப்பட்டது. ஆனால் மும்மொழி கொள்கைக்காக பள்ளி சிறு குழந்தைகளிடம் கூட கையெழுத்து இயக்கத்தை பெற்று வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
The post மும்மொழி விவகாரத்தை திசை திருப்பவே டாஸ்மாக் அலுவலகம், குடோன்களில் அமலாக்கத்துறை சோதனை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி appeared first on Dinakaran.