அறிவியல் புனைகதையைக் கூடச் சுவாரஸ்யமாக எழுதிவிடலாம்; ஆனால், நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்றின் கதையை நாவலாக எழுத முடியாது என்று சலித்துக்கொள்கிறார் எழுத்தாளர் ஜோதி ராமையா (சத்யராஜ்). ஆனால், ஆட்டோ ஓட்டுநரான கண்ணனின் (காளி வெங்கட்) வாழ்க்கையை உற்றுநோக்கி, நடுத்தரக் குடும்பம் ஒன்றின் கதையை அவர் நாவலாக எழுத முயலும்போது தன் எண்ணத்தை மாற்றிக்கொள்கிறார். தன்னால் அடுத்தக் கட்டத்தில் அடி எடுத்து வைக்க முடியாது என்று தெரிந்தும், வாரிசுகளையாவது தலைநிமிரச் செய்துவிட வேண்டும் என்று உழைத்துக் கொண்டிருக்கும் மிடில் கிளாஸ் அப்பாவின் வாழ்க்கைப் பக்கங்கள்தான் கதை.
சத்யராஜை வைத்துக் கதை சொன்ன உத்தி, தொடக்கத்தில் தொந்தரவுபோல் தோன்றினாலும், ஒரு கட்டத்தில் அவரது குரலையும் முகத்தையும் தேடத் தொடங்கிவிடுகிறது மனம். நடுத்தரக் குடும்பங்களுக்கேயுரிய தன்னிறைவற்ற பொருளாதாரம் உள்ளிட்ட போதாமைகளைத் தாண்டி, கண்ணனின் குடும்பம் அன்றாட வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்வதைச் சித்தரிக்க, தன்னுடைய கதாபாத்திரங்களை இயக்குநர் கார்த்திகேயன் மணி கையாண்ட விதத்தில் யதார்த்தம்.