கொச்சி: நடப்பு உலக சாம்பியனான அர்ஜெண்டினா கால்பந்து அணி வரும் நவம்பர் மாதம் பிஃபாவின் நட்புரீதியிலான போட்டியில் விளையாடுவதற்காக இந்தியாவின் தென் மாநிலமான கேரளாவுக்கு வருகை தருகிறது. இதை அர்ஜெண்டினா கால்பந்து சங்கம் நேற்று உறுதிப்படுத்தியுள்ளது. இந்த போட்டி நவம்பர் 10 – 18ம் தேதிகளுக்கு இடையில் கொச்சி அல்லது திருவனந்தபுரத்தில் நடைபெறக்கூடும்.
அர்ஜெண்டினா கால்பந்து சங்கம் தனது எக்ஸ் வலைதள பதிவில், “லயோனல் ஸ்கலோனியின் பயிற்சியின் கீழ் உள்ள அர்ஜெண்டினா தேசிய அணி இந்த ஆண்டில் எஞ்சியுள்ள 2 பிஃபா நட்புரீதியிலான போட்டிகளில் விளையாடும். இதில் முதல் போட்டி வரும் அக்டோபர் 6 முதல் 14 ம் தேதி வரை, அமெரிக்காவில் நடைபெறும் 2-வது போட்டி நவம்பர் 10 முதல் 18 வரை அங்கோலாவின் லுவாண்டா மற்றும் இந்தியாவின் கேரளாவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.