திமுக தலைமைக்கு ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக, 2024 மக்களவைத் தேர்தல் முடிந்த சூட்டோடு கோவையின் முதல் பெண் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், மேயராக இருந்தபோது தனது வார்டு மக்களை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்ட கல்பனா, மேயர் பதவி ராஜினாமாவுக்குப் பிறகு வார்டு மக்களை கண்டும் காணாது ஒதுங்கிவிட்டதாக சர்ச்சை வெடித்திருக்கிறது.
கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளில் 96 வார்டுகளை திமுக-வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வசப்படுத்தி வைத்திருக்கின்றன. மேயர் பதவி இம்முறை பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் திமுக முக்கிய நிர்வாகிகள் பலரும் தங்களது மனைவியரை வார்டு கவுன்சிலருக்கு நிறுத்தி ஜெயிக்க வைத்திருந்தார்கள். இதனால், யாருக்கு மேயர் யோகம் அடிக்குமோ என்ற எதிர்பார்ப்பு திமுக-வினர் மத்தியில் இருந்தது.