
அந்த ‘இருக்கையில்’ அமர்ந்திருப்பதன் அர்த்தம் என்ன என்ற வினாவை, ஒரு நீதிபதி என்றாவது எதிர்கொள்ள வேண்டிவரும். அது வெறும் நாற்காலி அல்ல, நீதிமன்றத்தில் நுழையும் ஒருவரின் பரிமாணங்களை அது மாற்றியமைக்கும்.
நீதிபதிகளுக்கும் பலவீனங்கள், தன்னம்பிக்கை வறட்சி, தடுமாற்றங்கள், தயக்கங்கள் வரும். ஆனால், நீதி பரிபாலனத்துக்காக அந்த நாற்காலியில் ஏறும்போது சிந்தனைகள் தீட்டப்படும், வார்த்தைகள் வலுப்பெறும், மிகுந்த வீரியத்துடனும், தைரியத்துடனும் முடிவுகள் வெளிப்படும். இதுவே, ஒருமுறை ஒரு முன்னாள் தலைமை நீதிபதியின் துணைவியாருடன் பேசிக் கொண்டிருக்கும்போது, ‘ஒரு நீதிபதியின் கடமையைச் செய்வது கிட்டத்தட்ட தெய்வீக அனுபவம்போல உணர்கிறேன்’ என்று உரைக்கச் செய்தது. ‘ஆனந்த் வெங்கடேஷ் என்ற தனிமனிதனால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத எண்ணங்கள் மற்றும் செயல்களை, நீதிபதியான ஆனந்த் வெங்கடேஷ் செய்ய முடிகிறது’ என்றேன்.

