பெங்களூரு நகர குடியிருப்பு ஒன்றில் கூகுள் நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவர் இந்தியில் பேசாததால் கார் நிறுத்தும் வசதியை வழங்க மறுத்துள்ளது சர்ச்சையாக மாறியுள்ளது. அந்த குடியிருப்பில் கார் நிறுத்துவதற்கான வசதி இருந்தும் இந்தியில் பேசாமல் ஆங்கிலத்தில் பேசிய காரணத்திற்காக குடியிருப்பு காவலர்கள் கார் நிறுத்தும் வசதியை வழங்க மறுத்ததை சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் அவர் பதிவு வெளியிட்டுள்ளார்.
இந்தியா முழுவதும் ஆங்கிலத்தை கட்டாயமாக்கி விடலாம் என்று அவர் தெரிவித்த ‘கமென்ட்’ விவாதப் பொருளாக மாறி, அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் மக்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இதேபோன்று, கர்நாடகாவில் பணியாற்றும் வங்கி மேலாளர் ஒருவரை கன்னடத்தில் பேச வற்புறுத்தி வாடிக்கையாளர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. மும்பையிலும் மராட்டிய மொழியில்பேசும்படி சண்டை போடும் காட்சிகள் சமீபத்தில் வெளிவந்தன.