பெலகாவி: பயணிகளிடம் ஏற்பட்ட மொழிப் பிரச்சினையில் அரசுப் பேருந்து நடத்துநரைத் தாக்கியது தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக கர்நாடக போலீஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் மகாராஷ்டிரா எல்லை அருகே உள்ள பெலகாவி மாவட்டத் தலைநகரில் வெள்ளிக்கிழமை நடந்துள்ளது.
நடந்த சம்பவம் குறித்து 51 வயதான நடத்துநர் மல்லப்பா ஹுக்கேரி கண்ணீருடன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சுலேபாவி கிராமத்தில் சிறுமி ஒருவர் தனது ஆண் நண்பருடன் பேருந்தில் ஏறினார். அவர் மராத்தியில் பேசினார். நான் ‘எனக்கு மராத்தி தெரியாது, கன்னடத்தில் பேசுங்கள்’ என்று கூறினேன். மராத்தி தெரியாது என்று சொன்னதும் என்னை அவமானப்படுத்திய அப்பெண், நான் கட்டாயம் மராத்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்றார். அப்போது திடீரென பலர் ஒன்று கூடி என்னை தலை முதல் கால் வரைத் தாக்கத் தொடங்கினர்" என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து காயமடைந்த அரசுப் பேருந்து நடத்துநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.