புதுடெல்லி: டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் அரசு இல்லத்தில் எரிந்த நிலையில் பணக் கட்டுகள் சிக்கிய விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட உள் விசாரணைக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் இறுதி முடிவை தலைமை நீதிபதி எடுப்பார் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மாவின் அரசு இல்லத்தில், பொருட்கள் வைக்கும் அறையில் கடந்த 14-ம் தேதி இரவு தீப்பிடித்தது. அங்கு எரிந்த நிலையில் பணக் கட்டுகள் சிக்கிய விவகாரம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவுக்கு தெரிவிக்கப்பட்டது. இது குறித்து கொலீஜியத்தில் ஆலோசனை நடத்தி, யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உபாத்யாய், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.