லண்டன்: டிரம்ப்-ஜெலன்ஸ்கி இடையேயான கடும் வாக்குவாதத்தை தொடர்ந்து, ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்த திட்டத்தை வகுப்பதென லண்டனில் நடந்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேச இருப்பதாக இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகள் தெரிவித்துள்ளன.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இணைந்து உருவாக்கிய நேட்டோ அமைப்பில் இணைய முயற்சித்ததைத் தொடர்ந்து, உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 2022ம் ஆண்டில் போர் தொடுத்தது. போர் தொடங்கி மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சி மேற்கொண்டுள்ளார். இதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் பேச்சுவார்த்தை நடத்திய அதிபர் டிரம்ப், உக்ரைன் அதிபர் வோலாடிமிர் ஜெலன்ஸ்கிக்கும் அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்று, அதிபர் ஜெலன்ஸ்கி, டிரம்ப்பை சந்திக்க கடந்த வெள்ளிக்கிழமை வெள்ளைமாளிகைக்கு சென்றார். அங்கு டிரம்புடனான சந்திப்பில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
ஜெலன்ஸ்கி நன்றியில்லாதவர், 3ம் உலக போருக்கு வழிவகுக்கிறார் என டிரம்ப் நேரடியாக குற்றம்சாட்டினார். இதனால் அமெரிக்கா, உக்ரைன் இடையேயான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதுவரை போரில் உக்ரைனுக்கு அதிக அளவு உதவிகள் செய்திருப்பது அமெரிக்கா மட்டுமே. எனவே அமெரிக்கா கைவிட்டால் உக்ரைனின் நிலை தலைகீழாகி விடும்.
இரண்டே நாளில் ரஷ்யாவிடம் அடிபணிய வேண்டி வரும். ஏற்கனவே அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடு முற்றிலும் மாறிவிட்டது. ரஷ்யாவுக்கு ஆதரவாக டிரம்ப் சாய்கிறார். இதனால் இந்த விவகாரத்தில் அமெரிக்காவிடமிருந்து ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் விலகி நிற்கின்றன.
இந்நிலையில், டிரம்புடனான மோதலை அடுத்து, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மரை சந்திக்க லண்டனுக்கு சென்றார். அங்கு, போரில் உக்ரைனுக்கு உதவ ரூ.24 ஆயிரம் கோடி கடன் வழங்க ஸ்டார்மர், ஜெலன்ஸ்கி இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் ஆகியோருடன் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், பிரான்ஸ், இங்கிலாந்து இணைந்து போர் நிறுத்த ஒப்பந்தத்தை தயார் செய்வது எனவும், அதை வைத்து அதிபர் டிரம்புடன் ஆலோசிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.
மேலும் டிரம்புடனான மோதல் நடந்த உடனேயே உக்ரைன் அதிபருக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அனைத்தும் ஒட்டுமொத்த ஆதரவு தெரிவித்தன. எக்காரணத்தை கொண்டும் உக்ரைனை ரஷ்யா கைப்பற்றுவதை ஐரோப்பிய நாடுகள் விரும்பவில்லை. எனவே, உக்ரைன் விவகாரத்தில் முக்கிய முடிவு எடுக்க நேற்று உடனடியாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள் அடங்கிய உச்சி மாநாடு லண்டனில் நடத்தப்பட்டது.
இதில், பிரான்ஸ் அதிபர் இமானுவேல், இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, இத்தாலி பிரதமர் மெலோனி மற்றும் கனடா, ஜெர்மனி, நெதர்லாந்து, டென்மார்க், பின்லாந்து, போலாந்து உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும் ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா, நேட்டோ செயலாளர் மார்க் ரூட்டே, துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹகன் பிதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இம்மாநாட்டில் தொடக்க உரையாற்றிய இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர், ‘‘உக்ரைன் பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கப்படுவது, ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் பிற நாடுகளின் பாதுகாப்பிற்கும் இன்றியமையாதது. இதற்காக தலைமுறையில் நிகழும் மகத்தான ஒற்றை நிகழ்வை நோக்கி நாம் முன்னேற வேண்டும். பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் பிற நாடுகள் உக்ரைனுடன் இணைந்து போர் நிறுத்த திட்டத்தை உருவாக்க முடிவு செய்துள்ளோம். இந்த திட்டத்தை அமெரிக்க அதிபர் டிரம்பிடம் எடுத்து சென்று ஆலோசிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.
இதையடுத்து, ரஷ்யா, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான திட்டம் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் உக்ரைனுக்கு ஆதரவாக துணை நிற்பதாகவும், வேண்டிய உதவிகளை செய்வதாகவும் வாக்குறுதி அளித்தன. இறுதியாக, போர் நிறுத்த திட்டத்தை வகுப்பதென கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஐரோப்பிய நாடுகளின் கோரிக்கையை அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்றுக் கொள்வாரா என்பது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
* உக்ரைனுக்கு வேறு அதிபர் வேண்டும்
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் நேற்று அளித்த பேட்டியில், ‘‘அமெரிக்காவுடனும், ரஷ்யாவுடனும் இணைந்து பணியாற்றக் கூடிய தலைவர் உக்ரைனுக்கு வேண்டும். அதிபர் டிரம்ப், ஜெலன்ஸ்கி சந்திப்பில் நடந்த காரசார வாக்குவாதமானது பதுங்கியிருந்து நடத்தும் தாக்குதல் எனும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை’’ என்றார்.
The post ரஷ்யா – உக்ரைன் இடையே போர் நிறுத்த திட்டம்: லண்டனில் நடந்த ஐரோப்பிய தலைவர்கள் மாநாட்டில் தீர்மானம்: அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பேச பிரிட்டன், பிரான்ஸ் முடிவு appeared first on Dinakaran.