திருவாரூர் மாவட்ட திமுக-வில் அசைக்கமுடியாத சக்தியாக இருக்கும் பூண்டி கலைவாணன் எம்எல்ஏ, 18 ஆண்டுகளாக மாவட்டச் செயலாளராகவும் இருக்கிறார். திமுக தலைவர் கருணாநிதி திருவாரூரில் இரண்டு முறை வென்றபோதும் தொகுதியில் அவருக்கான ஆக்டிங் எம்எல்ஏ-வாக இருந்த கலைவாணன், இந்த முறை அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால், இதே மாவட்டத்தைச் சேர்ந்த டி.ஆர்.பி.ராஜாவும் அதற்கான போட்டியில் இருந்ததால் இருவருக்கும் அமைச்சரவையில் இடமளிக்காமல் சாதுர்யமாக தவிர்த்துக் கொண்டது தலைமை.
இதனால், திருவாரூர் மாவட்டத்தில் கலைவாணனும் ராஜாவும் ஆளுக்கொரு பக்கம் பலம் திரட்டினார்கள். மன்னார்குடியில் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக வென்றிருக்கும் டி.ஆர்.பி.ராஜா, தனது தொகுதிக்குள் பூண்டி கலைவாணன் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்பதில் தீர்மானமாக இருந்தார். இதனால், சம்பிரதாயமான கட்சி நிகழ்ச்சிகளைத் தவிர வேறு எதற்காகவும் பூண்டி கலைவாணன் மன்னார்குடி பக்கம் தலைகாட்டுவதில்லை.