ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தி அசத்தியது டெல்லி கேப்பிடல்ஸ் அணி. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் 5 விக்கெட்கள் இழப்புக்கு 188 ரன்கள் குவித்தது. அபிஷேக் போரெல் 37 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 49 ரன்களும், கே.எல்.ராகுல் 32 பந்துகளில் 38 ரன்களும் சேர்த்தனர். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 18 பந்துகளில் 34 ரன்களும், கேப்டன் அக்சர் படேல் 14 பந்துகளில் 34 ரன்களும் விளாசி அசத்தினர்.
20-வது ஓவரை வீசிய ராஜஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரான சந்தீப் சர்மா 19 ரன்களை தாரை வார்த்திருந்தார். இந்த ஓவரில் அவர், 4 வைடுகள், ஒரு நோ பால் வீசியிருந்தார். யார்க்கர், வைடு யார்க்கர் வீச முயன்று தொடர்ச்சியாக தவறுகளை செய்தார் சந்தீப் சர்மா. போதாத குறைக்கு கடைசி பந்தில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் கொடுத்த எளிதான கேட்ச்சை தீக் ஷனா தவறவிட்டிருந்தார். இந்த ஓவரில் ராஜஸ்தான் அணி செய்த தவறுகள் போட்டியின் முடிவில் அவர்களுக்கு பெரிய பாதகமாக அமைந்தது.