மாஸ்கோ: குர்ஸ்க் பிராந்தியத்தில் அதிபர் புடின் ராணுவ உடையில் சென்று ராணுவ அதிகாரிகளை சந்தித்து பேசிய நிலையில், அந்த பிராந்தியத்தில் உள்ள மிக பெரிய நகரை கைப்பற்றி விட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் 3 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார்.போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக சவுதி அரேபியாவில் அமெரிக்கா -உக்ரைன் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டது. 30 நாள் இடைக்கால போர் நிறுத்தத்தை ஏற்க உக்ரைன் தயாராக இருக்கிறது என டிரம்ப் தெரிவித்தார். இதனை அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியும் உறுதி செய்தார். அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் போர்நிறுத்த யோசனை குறித்த விவரங்களை வழங்கியதாகவும், ரஷ்யா அதைப் பற்றி விவாதிக்க தயாராக இருப்பதாகவும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர். டிரம்பின் மத்திய கிழக்கு சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் நேற்று மாஸ்கோவிற்கு வந்து அதிபர் புட்டினை சந்தித்தார்.
இதற்கிடையே,உக்ரைன் கைப்பற்றிய குர்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள மிக பெரிய நகரான சுட்ஸாவை திரும்ப கைப்பற்றிவிட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைன் படைகள் ஊடுருவி பல நகரங்களை கைப்பற்றியது. உக்ரைனிடம் இழந்த பகுதிகளை மீட்டெடுக்க ரஷ்ய படைகள் கடுமையாக போரிட்டு வருகின்றன. குர்ஸ்க் பகுதியில் அதிபர் புடின் ராணுவ உடையில் சென்று ராணுவ தளபதிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு சுட்ஸா நகரை கைப்பற்றி விட்டதாக ரஷ்யா அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
The post ராணுவ உடையில் ராணுவ தளபதிகளை சந்தித்தார் அதிபர் புடின்; குர்ஸ்க் பிராந்தியத்தின் மிக பெரிய நகரை கைப்பற்றி விட்டதாக ரஷ்யா அறிவிப்பு appeared first on Dinakaran.