மதுரை : ராமதாஸ் – அன்புமணி பேச்சுவார்த்தையில் எங்களுக்கு தொடர்பு இல்லை என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸூக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே உட்கட்சி மோதல் நடைபெறும் நிலையில், அமித் ஷாவுக்கு நெருக்கமான ஆடிட்டர் குருமூர்த்தி நேற்று ராமதாஸை சந்தித்து பேசினார். இந்த நிலையில், மதுரை மாவட்டம் ஒத்தக்கடையில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது ராமதாஸ், அன்புமணி இடையே சமாதானத்தை ஏற்படுத்த பாஜக முயற்சிக்கிறதா ? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், “இரண்டு நாட்கள் பயணமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா மதுரை வருகிறார். மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யும் அமித் ஷா, அதனைத் தொடர்ந்து பா.ஜ.க. நிர்வாகிகளை சந்திக்கிறார்.மதுரையில் மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்கும் கூட்டத்தில் கூட்டணி கட்சியினர் பங்கேற்க மாட்டார்கள்.
அமித்ஷா – அன்புமணி சந்திப்பு குறித்து இதுவரை திட்டம் இல்லை. பாமகவில் ராமதாஸ் – அன்புமணி பேச்சுவார்த்தையில் எங்களுக்கு சம்பந்தம் இல்லை. ஆடிட்டர் குருமூர்த்தி, சைதை துரைசாமி ஆகியோர் தனிப்பட்ட முறையில் பாமக. தலைவர் ராமதாசை சந்தித்துள்ளனர். அதற்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை.குருமூர்த்தி நாட்டில் நல்ல விஷயங்கள் நடக்க வேண்டும் என முயல்கிறார். அவர் ஒரு நலம் விரும்பி. பாமக நிச்சயமாக என்டிஏ கூட்டணிக்கு வரும் என்று நம்புகிறேன். தேமுதிகவும் எங்கள் கூட்டணியில் இணையும் என நம்பிக்கை உண்டு.”இவ்வாறு தெரிவித்தார்.
The post ராமதாஸ் – அன்புமணி பேச்சுவார்த்தையில் எங்களுக்கு தொடர்பு இல்லை : மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி appeared first on Dinakaran.