ராமேஸ்வரம்: மண்டபம் மீனவர்கள் 10 பேரை பிப்.17ம் தேதி வரை சிறையிலடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடிப்பதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் சென்று தலைமன்னார் – தனுஷ்கோடி இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படை எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி மீனவர்கள் 10 பேரை தெற்கு மன்னார் அருகே கைது செய்தது.
மேலும் அவர்களிடம் இருந்து ஒரு விசை படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். கைதான 10 மீனவர்களும் மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். மீனவர்களை படகுடன் மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க இருப்பதாக இலங்கை கடற்படை தகவல் தெரிவித்து இருந்தது. இந்நிலையில், கைது செய்யப்பட்ட 10 மண்டபம் மீனவர்களும் இலங்கை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் மீனவர்கள் 10 பேரை பிப்.17ம் தேதி வரை சிறையிலடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியத்தால் ராமேஸ்வரம் மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர். மேலும் ராமேஸ்வரம் மீனவர்களை மீட்க நடவடிக்கை வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
The post ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை பிப்.17ம் தேதி வரை சிறையிலடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு..!! appeared first on Dinakaran.