சென்னை ராயபுரம் – புதுடெல்லி படேல் நகர் இடையே முதன்முறையாக சரக்கு ரயில் (பார்சல் கார்கோ விரைவு ரயில்) போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. ஒரு சுற்று பயணம் மூலமாக, குறைந்தபட்சம் ரூ.25 லட்சம் ரயில்வேக்கு வருவாய் கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தெற்கு ரயில்வேயில் சென்னை ரயில்வே கோட்டத்தில் சரக்கு ரயில் போக்குவரத்தை மேம்படுத்த கடந்த 2020-ம் ஆண்டுக்கு பிறகு பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக, நவீன வசதிகள் கொண்ட சரக்கு ரயில்கள் அறிமுகப்படுத்தல், சரக்குகளை கையாள மேம்படுத்த ரயில் நிலையத்தை உருவாக்குதல், வணிக மேம்பாட்டுக் குழு அமைத்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, சரக்கு ரயில் போக்குவரத்து வேகமாக வளரத் தொடங்கியது. தற்போது, சென்னையில் இருந்து நாட்டின் பல நகரங்களுக்கு சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.