அகமதாபாத்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தும் குஜராத் டைட்டன்ஸ் அணி, பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்ட லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் மோதுகிறது.
ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி 12 ஆட்டங்களில் விளையாடி 9 வெற்றி, 3 தோல்விகளுடன் 18 புள்ளிகளை குவித்து முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிட்டது. இருப்பினும் அந்த அணி லீக் சுற்றை முதல் இரு இடங்களுக்குள் நிறைவு செய்வதில் கவனம் செலுத்தக்கூடும். ஏனெனில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் தலா 17 புள்ளிகளுடன் முறையே 2 மற்றும் 3-வது இடங்களில் உள்ளன. இந்த இரு அணிகளுக்கும் தலா 2 ஆட்டங்கள் மீதம் உள்ளன.