தாகா: வங்கதேசம் வெளியிட்டுள்ள புதிய கரன்சி நோட்டுகளில் அந்நாட்டின் தேசத் தந்தை முஜிபுர் ரகுமான் படம் நீக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளில் வழக்கமாக அந்நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்த தேசத் தந்தை ஷேக் முஜிபுர் ரகுமான் படம் இடம் பெற்றிருக்கும். இவரது மகள் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக்கு எதிராக கடந்தாண்டு மாணவர்கள் போராட்டம் நடத்தினர். வங்கதேச சுதந்திரத்தின் போது உயிரிழந்த ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு மீண்டும் இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டதை எதிர்த்து இந்த போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் தீவிரம் அடைந்ததால், அவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். தற்போது அங்கு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசின் ஆட்சி நடைபெறுகிறது.