சியோல்: அண்டை நாடுகளுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் வடகொரியா அவ்வப்போது பல்வேறு ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகின்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் வடகொரியாவின் கடற்படையை வலுப்படுத்தும் வகையில் புதிய போர்க்கப்பல் அறிமுக விழா நடைபெற்றது. சோங்ஜினின் வடகிழக்கு துறைமுகத்தில் நடந்த இந்த விழாவில் அதிபர் கிம் ஜாங் உன் கலந்து கொண்டார். தொடர்ந்து அவர் 5000 டன் எடை கொண்ட புதிய போர்க்கப்பலை அறிமுகம் செய்து வைத்தார். அப்போது கப்பலை விடுவிப்பதில் கோளாறு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனால் கப்பல் நகர்ந்து செல்வதில் சிக்கில் ஏற்பட்டு கப்பலின் அடிபாகங்கள் சில சேதமடைந்துள்ளது. அதிபரின் கண் முன்னே நடந்த இந்த சம்பவத்தால் அவர் மிகுந்த கோபமடைந்ததாக தெரிகிறது. முழுமையான கவனக்குறைவு, பொறுப்பின்மையால் ஏற்பட்ட கடுமையான விபத்து மற்றும் குற்றச்செயல் என்று கூறிய அதிபர் கிம் ஜாங் உன், அதிகாரிகள், தொழில்நுட்ப கலைஞர்கள், அறிவியலார்கள், கப்பலை வடிவமைத்தவர்கள், கப்பலை கட்டியவர்கள் என அனைவரையும் கடுமையாக எச்சரித்துள்ளார். இந்த கப்பலானது ஏவுகணை சோதனை, அணுசக்தி திறன் கொண்ட பாலிஸ்டிக் மற்றும் கப்பல் ஏவுகணைகள் உட்பட பல்வேறு ஆயுத அமைப்புக்களை கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
The post வடகொரியாவில் அறிமுகம் செய்த உடனேயே விபத்தில் சிக்கிய போர்க்கப்பல்: கொந்தளித்த அதிபர் கிம் ஜாங் உன் appeared first on Dinakaran.