சென்னை: வடபழனியில் வணிக வளாகத்துடன் கூடிய பேருந்து நிலையம் அமைக்கப்படுமென மெட்ரோ ரயில்வே நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழகம் இணைந்து உருவாக்கிய சிறப்பு நிறுவனமான சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம், வடபழனியில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் மற்றும் வணிக வளாகத்துடன் கூடிய வடபழனி பணிமனை வளர்ச்சி திட்டத்துக்கான ஒப்பந்தத்தை ரூ.481.3 கோடி மதிப்பில் வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டம், சென்னையின் மிகவும் பரபரப்பான போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றான ஆற்காடு சாலையில் 6.65 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள வடபழனி பேருந்து பணிமனை இடத்தில் உருவாக்கப்படும். 158 பேருந்துகளுக்கு மேலாக, தினமும் 1158 சேவைகளுடன் சென்னை மாநகரின் பரபரப்பான 32 பணிமனைகளில் வடபழனி ஒன்றாகும்.
இந்த வளர்ச்சி திட்டம், அதிக தேவை கொண்ட நகர்ப்புற மையத்தை உலகத்தரம் வாய்ந்த, பல்நோக்கு வசதியாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பேருந்து முனையத்தை பயன்படுத்துபவர்களுக்காக ஆற்காடு சாலையிலிருந்து, வணிகப் பயன்பாட்டிற்காக குமரன் காலனி பிரதான சாலையிலிருந்து என தள வடிவமைப்பு இரண்டு அணுகல் வழிகளை வழங்குகிறது. இந்த வளர்ச்சி திட்டம் சீரான போக்குவரத்து இயக்கம், 2,801 சதுர மீட்டர் திறந்த வெளி ஒதுக்கீடு மற்றும் 2,304 சதுர மீட்டர் பூங்கா/தோட்டம் பகுதி ஆகியவற்றை கொண்டுள்ளது.
தரை தளத்தில் அமைக்கப்படும் நவீன பேருந்துநிலையத்தில் 5 ஏறும் இடங்கள், 2 இறங்கும் இடங்கள், பயணிகளுக்கான வசதிகள் மற்றும் நுழைவு வாயில்கள் அமைக்கப்படுகின்றன. மொத்த கட்டுமானப் பரப்பளவு 1,06,762 சதுர மீட்டர்கள். இரண்டு அடித்தளங்களில் 1,475-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் மற்றும் 214 நான்கு சக்கர வாகனங்களுக்கான வாகன நிறுத்துமிட வசதிகள்.
முதல் தளத்திலிருந்து பத்தாவது தளங்கள் வரை கார்ப்பரேட் அலுவலகங்கள், வரவேற்பு ஓய்வறைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கான பிரத்யேக இடங்கள் அமைய உள்ளன. 11 மற்றும் 12-வது தளங்கள் அனிமேஷன், விஷுவல் எபெக்ட்ஸ், கேமிங் அண்ட் காமிக்ஸ் துறைக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. பயணிகள், பணியாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு பல்வேறு உணவு விருப்பங்களை வழங்கும் ஒரு பிரத்யேக உணவு மையம் மற்றும் உணவகங்கள் ஐந்தாவது தளத்தில் அமைய உள்ளன. பயணிகளும் மற்றவர்களும் எளிதில் பயன்படுத்த ஏதுவாக சில்லறை விற்பனை நிலையங்கள் தரை தளத்தில் அமைந்திருக்கும். மாடியில் பசுமையான தோட்டம் மற்றும் சூரிய ஒளி மின்கல அமைப்புகள் இடம்பெறும். இந்த லட்சியத் திட்டம் சென்னையின் நகர்ப்புற வளர்ச்சியில் ஒரு பெரிய மைல்கல் ஆகும். இது, நவீன வணிக மற்றும் அலுவலக இடங்களுடன் ஒருங்கிணைந்த உலகத் தரம் வாய்ந்த போக்குவரத்து மையத்தை உறுதிப்படுத்துகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post வடபழனியில் வணிக வளாகத்துடன் பேருந்து முனையம் 12 தளங்களில் அமைக்க திட்டம்; மெட்ரோ ரயில்வே தகவல் appeared first on Dinakaran.