செங்கல்பட்டு: வணிகர் சங்கங்களின் பேரவை மாநாட்டில் சிறப்பு அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். “வணிகர் நல வாரியத்தில் பதிவு செய்து நிரந்தர உறுப்பினர்களாக இருப்போருக்கான உதவித்தொகை ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும். கட்டணமில்லா உறுப்பினர் சேர்க்கைக்கான கால அவகாசம் மேலும் 6 மாதங்கள் நீடிக்கப்படும்” என்பது போன்ற அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட்டார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஆண்டுதோறும் மே 5ம் தேதி வணிகர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு 42வது வணிகர் தினத்தை முன்னிட்டு வணிகர் கோரிக்கை பிரகடன மாநாடு, மதுராந்தகம் பகுதி திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையொட்டி இன்று நடைபெற்றது.
இந்த மாநாட்டிற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரம ராஜா தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, வணிகர்களுக்கு விருதுகள் மற்றும் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு அறிவிப்புகளை வெளியிட்டார்;
“வணிகர் நல வாரியத்தில் பதிவு செய்து நிரந்தர உறுப்பினர்களாக இருப்போருக்கான உதவித்தொகை ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும்
கட்டணமில்லா உறுப்பினர் சேர்க்கைக்கான கால அவகாசம் மேலும் 6 மாதங்கள் நீடிக்கப்படும்
உணவுப் பொருட்கள் விற்பனை தவிர்த்து 500 சதுர அடிக்கு கீழ் உள்ள நிறுவனங்களுக்கு சுய சான்றிதழ் அடிப்படையில் தொழில் உரிமம் வழங்கப்படும்
சென்னை மாநகராட்சி நீங்கலாக பிற மாநகராட்சிகளில் உள்ள கடைகள், வணிக வளாகங்களில் உள்ள பிரச்னைகளை தீர்க்க அமைக்கப்பட்ட வழிகாட்டுக்குழுவைப் போல, சென்னையிலும் பிற நகராட்சிகளிலும் அமைக்கப்படும்
வர்த்தகர்கள், சிறு வியாபாரிகளுக்கான புதிய இணையதளம் உருவாக்கப்படும். 22 சேவைகளை இதன் மூலம் வணிகர்கள் பெற்றுக்கொள்ளலாம்
அனைத்து நாட்களும், 24 மணி நேரமும் வணிக நிறுவனங்களை திறக்க பிறப்பிக்கப்பட்ட அரசாணை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு
மே 5ஆம் தேதியை ‘வணிகர் நாளாக’ அறிவிப்பதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும்” போன்ற சிறப்பு அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட்டார்.
The post வணிகர் சங்கங்களின் பேரவை மாநாட்டில் சிறப்பு அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.