சென்னை: வந்தே பாரத் ரயிலில் அசைவ உணவு நிறுத்தமா என்பது குறித்து தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. சென்னையில் இருந்து நேற்று முன்தினம் நாகர்கோவில் சென்ற வந்தே பாரத் ரயிலில் பயணித்த பயணி ஒருவர் தனது எக்ஸ் தள பதிவில், ”ஐஆர்சிடிசி செயலியில் வந்தே பாரத் ரயிலுக்கு முன்பதிவு செய்யும் போது காலை உணவில் அசைவத்தை தேர்ந்தெடுக்க முடியவில்லை. அந்த செயலியில் மதிய உணவு மற்றும் இரவு உணவில் தான் அசைவ உணவு இருக்கிறது” என குறிப்பிடப்பட்டிருந்தார்.
டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, தேவையான உணவிற்கும் சேர்த்து தான் பயணிகள் பணத்தை செலுத்துகின்றனர். இதுநாள் வரையில் விருப்பத்திற்கு ஏற்றார் போல் சைவம், அசைவம் ஆகியவற்றை தேர்ந்தெடுக்கும் வகையில் பயணிகளுக்கு வாய்ப்பு இருந்தது. திடீரென சைவம் மட்டும் தான் காலை உணவில் உள்ளதாக பயணி ஒருவர் சமூக வலைத்தளங்களில் குற்றம் சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதற்கு தெற்கு ரயில்வே மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட விளக்கம் வருமாறு:
வந்தே பாரத் ரயிலில் சைவ, அசைவ உணவு வழங்கப்படுகிறது. தொழில்நுட்ப கோளாறால் அந்த நேரத்தில் பயணிகளால் அசைவ உணவு ஆர்டர் செய்ய முடியவில்லை. வந்தே பாரத் ரயிலில் அசைவ உணவு வழங்கப்படும். 30ம் தேதி தெற்கு ரயில்வே மண்டலத்தில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் 603 அசைவ உணவு பொட்டலங்களும், நேற்று 1302 அசைவ உணவு பொட்டலங்களும் வழங்கப்பட்டுள்ளது.
நேற்று கோவை-சென்னை வந்தே பாரத் ரயிலில் 77, திருவனந்தபுரம்-காசர்கோடு வந்தே பாரத் ரயிலில் 411, சென்னை-மைசூரு வந்தே பாரத் ரயிலில் 197, நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயிலில் 173, சென்னை-விஜயவாடா வந்தே பாரத் ரயிலில் 46, மங்களூரு-திருவனந்தபுரம் வந்தே பாரத் ரயிலில் 398 பொட்டலங்கள் என 1302 அசைவ உணவு பொட்டலங்கள் பயணிகளுக்கு வழங்கப்பட்டது.
அதேபோல், வந்தே பாரத் ரயிலில்களில் 603 அசைவ உணவு பொட்டலங்கள் பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ரயில்வே நிர்வாகம் இதுபோன்ற தொழில்நுட்ப கோளாறுகளை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு தெற்கு ரயில்வே விளக்களித்துள்ளது.
The post வந்தே பாரத் ரயிலில் அசைவ உணவு நிறுத்தமா? தெற்கு ரயில்வே விளக்கம் appeared first on Dinakaran.