தொழில்நுட்ப வளர்ச்சியடைந்த இந்த காலகட்டத்தில், நகர்ப்புற வாகன இரைச்சலில் இருந்து விடுபட்டு இயற்கை சூழலை அனுபவிக்க, வனப்பகுதிகளை நாடும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பிரதேசங்களான ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுதிகளுக்கு மக்கள்படையெடுப்பதால், நெரிசலை தவிர்க்க உயர் நீதிமன்றம் தலையிட்டு ‘இ-பாஸ்’ அறிமுகம் செய்துள்ளது. அனுமதிக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற பிரபலமான சுற்றுலா தலங்களையும் தாண்டி, அடர்ந்த காடுகளுக்குள் ‘ட்ரெக்கிங்’ எனப்படும் மலையேற்றப்பயிற்சி மேற்கொள்ளும் இளைஞர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தகவல் தொழில்நுட்ப பணியில் ஈடுபடும் இளைஞர்கள் இத்தகைய மலையேற்ற நடைபயிற்சியை அதிகம் விரும்புகின்றனர். அனுமதிக்கப்படாத காட்டுப்பகுதிகளுக்குள் அவர்கள் சென்று மலையேற்ற நடவடிக்கையில் ஈடுபட்டதில் அசம்பாவிதங்கள் நடந்ததை அடுத்து, தமிழக வனத்துறையே அங்கீகரிக்கப்பட்ட மலையேற்றப்பாதைகளை உருவாக்கி முறைப்படி அனுமதி அளித்து வருவது வரவேற்கத்தக்கது.