நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று கூடவுள்ள நிலையில், அங்கு விவாதிக்கப்படவுள்ள முக்கியமான பல பிரச்சினைகளில் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான பதவி நீக்கம் கோரும் தீர்மானமும் கொண்டு வரப்பட உள்ளதாக செய்திகள் வந்துள்ளன. கடந்த மார்ச் மாதம் டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்த யஷ்வந்த் வர்மா வீட்டில் பணக் கட்டுகள் எரிந்த நிலையில் எடுக்கப்பட்ட விவகாரம் நாட்டையே உலுக்கியது.
உடனடியாக அவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதுடன் நீதித்துறை பணிகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டார். மூன்று நீதிபதிகள் அடங்கிய உள் விசாரணைக்குழு முதற்கட்ட விசாரணை நடத்தி அளித்த அறிக்கையின் அடிப்படையில், அவரை பதவிநீக்கம் செய்யும்படி, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா பரிந்துரை அளித்துவிட்டார். அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.