இந்திய வரலாற்றில் மிக முக்கியமான ஆண்டு 1946 என்று அப்போதைய இந்திய விவகாரங்களுக்கான பிரிட்டிஷ் அமைச்சர் ஃபிரடெரிக் பெத்திக் லாரன்ஸ் பிரபு கூறினார். இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கும் திட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர் இவர். கேபினட் தூதுக்குழுவில் ஒருவராக இருந்தார். இது இந்திய சுதந்திரத்துக்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது.
டில்லியில் நாடாளுமன்றக் கட்டிடத்தில் இப்போது ‘மத்திய ஹால்’ என்று அழைக்கப்படும் இடத்தில் அரசியல் நிர்ணய சபை 1946-ம் ஆண்டு டிசம்பர் 9-ஆம் தேதி முதன் முறையாகக் கூடியது. சத்தியாக்கிரகப் போராட்டங்களில் கலந்து கொண்ட பலர் அரசியல் நிர்ணய சபையில் இருந்தார்கள். பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலமான தலைவர்களும் அதில் இருந்தார்கள். அன்றைய சென்னை மாகாணத்திலிருந்து என்.கோபால சுவாமி ஐயங்கார், அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர், காமராஜர், எஸ்.ராதாகிருஷ்ணன், டி.டி.கிருஷ்ணமாச்சாரி முதலியோர் அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களாகத் திகழ்ந்தார்கள்.