வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் பல்வேறு நாடுகள் மீது அதிக வரிகளை விதித்த அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் உத்தரவுகள் சட்டவிரோதமானவை என்று கூறி, அந்த உத்தரவுகளை அமெரிக்க கூட்டாட்சி மேல்முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இது, ட்ரம்ப்புக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
‘இந்த விவகாரத்தில் அடுத்து என்ன?’ என்ற கேள்வி எழுகிறது. இந்தச் சூழலில், ‘வரிவிதிப்பு தொடர்பான ட்ரம்ப்பின் உத்தரவுகளை அமெரிக்க கூட்டாட்சி மேல்முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை அமெரிக்க உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தால், ட்ரம்ப் அரசு நிர்வாகம் வரி தொடர்பாக உலக நாடுகளுடன் நடத்தும் பேர அரசியல் முடிவுக்கு வரும். அமெரிக்காவின் எதிர்கால கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட நாடுகள் நிராகரிக்கும்; முந்தைய ஒப்பந்தங்களையும் கூட மறுபரிசீலனை செய்யக் கோரும் உரிமையைப் பெறும்” என்று அமெரிக்காவின் பிரபல சட்ட நிபுணர் ஒருவர் கூறுகிறார்.