திருப்புவனம்: வருமானம் ஈட்டிய அஜித்குமாரை இழந்ததால், அவரது குடும்பம் ஆதரவற்ற நிலையில் தவித்து வருகிறது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தைச் சேர்ந்தவர் மாலதி. இவர் மதுரை மாவட்டம் சோழவந்தானைச் சேர்ந்த பாலகுருவை திருமணம் செய்தார். இவர்களது மகன்கள் அஜித்குமார், நவீன்குமார். 20 ஆண்டுகளுக்கு முன்னர் பாலகுரு உயிரிழந்த நிலையில், தனது 2 குழந்தைகளுடன் மடப்புரத்துக்கு வந்த மாலதி, உறவினர்கள் ஆதரவுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
இவர் தென்னை தட்டி முடைந்து, 2 மகன்களையும் படிக்க வைத்தார். 10-ம் வகுப்பு வரை படித்த அஜித்குமார், பூக்கடையில் வேலை பார்த்து வந்தார். இவரது தம்பி நவீன்குமார் பொறியியல் படிப்பு படித்துவிட்டு, வேலை இல்லாமல் உள்ளார். இதனால் அஜித்குமார் வருமானத்தில் குடும்பம் நடந்து வந்தது. 2 மாதங்களுக்கு முன்புதான் அஜித்குமார் தனியார் நிறுவனம் மூலம் தற்காலிக காவலாளியாக மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் சேர்ந்தார்.