சென்னை: தமிழக சட்டமன்றத்தில் தமிழ்நாடு பணக் கடன்கள் வழங்குபவர்கள் சட்ட திருத்தத்தை சட்டமன்றத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தாக்கல் செய்தார். அந்த சட்ட மசோதாவில் கூயிருப்பதாவது: தனிநபர்கள், தனி நபர்கள் குழு, சுய உதவிக்குழுக்கள் உள்ளிட்டவற்றிற்கு கடன் வழங்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள பணக்கடன்கள் வழங்கும் நிறுவனங்களின் வலுக்கட்டாய வசூலிப்பு முறைகளால் பொதுமக்கள் மிகுந்த இன்னல்களுக்கு உள்ளாகின்றனர்.
வலுக்கட்டாய கடன் வசூலிப்பு முறைகளில் இருந்து பொருளாதாரத்தில் பின் தங்கிய மற்றும் நலிவடைந்த பிரிவினரை பாதுகாக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டத்திருத்தத்தின் படி, கடன் பெறுவோருக்கும் கடன் வழங்கும் நிறுவனத்திற்கும் இடையே உள்ள பூசல்களை தீர்த்துவைக்க குறை தீர்ப்பாயரை அரசு நியமிக்கலாம். கடன் வழங்கிய நிறுவனம் கடன் பெற்றவரையோ அல்லது அவரது குடும்பத்தினரையோ வலுக்கட்டாய நடவடிக்கைக்கு உட்படுத்தவோ, மிரட்டவோ, பின் தொடரவோ, அவர்களது சொத்துக்களை பறிக்கவோ கூடாது.
கடன் பெற்றவரிடமோ அல்லது அவரது குடும்பத்தினரிடமோ வலுக்காட்டாயமாக வசூலிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ஐந்து லட்சம் ரூபாய் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். வலுக்கட்டாய நடவடிக்கைகளில் கடனை வசூல் செய்தால் பிணையில் வெளிவர முடியாத அளவிற்கு சிறை தண்டனை விதிக்கப்படும்.
இச்சட்டமுன்வடிவின் படி தண்டனைக்குரிய குற்றங்களில் கைது செய்யப்படுவோர் பிணையில் வெளிவரமுடியாது. இவ்வாறு மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
The post வலுக்கட்டாயமாக கடன் வசூல் செய்வோருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை: சட்டசபையில் சட்ட முன்வடிவை தாக்கல் செய்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.