வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் இருப்பதாக தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருவதை அடுத்து, அரசியல் விவாதத்தின் மையப் பொருளாக உருவெடுத்துள்ளது தேர்தல் ஆணையம். பிஹார் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் குறித்த புகார்களுக்கு பதில் சொல்லி முடிந்த நிலையில், கர்நாடக வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ள குற்றச்சாட்டு தீவிரமடைந்துள்ளது.
கர்நாடக மாநில வாக்காளர் பட்டியலில் தவறான முகவரியில் இடம்பெற்றுள்ள வாக்காளர்கள், ஒரே வீட்டில் நூற்றுக்கணக்கில் இடம்பெற்றுள்ள வாக்காளர்கள், புகைப்பட குளறுபடி, புதிய வாக்காளர் சேர்ப்பில் குளறுபடி என பலவிதமான தவறுகள் இருப்பதாக தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ராகுல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அவருக்கு ஆதரவாக மற்ற எதிர்க்கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றன. இதையெல்லாம் மறுத்துள்ள தேர்தல் ஆணையம், இதுகுறித்து முறைப்படி எழுத்துமூலம் புகார் அளிக்க வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.