சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள விசாரணை கைதிகளின் நெருங்கிய உறவுகளின் இறுதிச் சடங்கில் பங்கேற்க சிறைத்துறை அதிகாரிகளே அனுமதி வழங்கும் வகையில் சுற்றறிக்கை வெளியிடுமாறு தமிழக உள்துறை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பயங்கரவாத தாக்குதல்கள் நடத்த சதி திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டி தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பரகத்துல்லா என்பவரின் தாயார் மரணம் அடைந்துள்ளார். அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்க அனுமதி அளிக்க கோரி பரக்கத்துல்லாவின் சகோதரி சரிக்காது நிஷா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
மனுவை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அடங்கிய அமர்வு சிறப்பு அமர்வாக இன்று விசாரித்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தண்டனை கைதிகளுக்கு விடுப்பு வழங்க சிறைத்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில் விசாரணை கைதிகள் நீதிமன்றங்களை நாட வேண்டிய நிலை உள்ளது. அதனால் விசாரணை கைதிகளின் தாய், தந்தை, கணவன் அல்லது மனைவி, பிள்ளைகள் போன்ற நெருங்கிய உறவுகள் மரணம் அடைந்தால், இறுதிச் சடங்கில் பங்கேற்க அவர்களுக்கு சிறைத்துறை அதிகாரிகளே அனுமதி வழங்கும் வகையில் தமிழக அரசு சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும். இந்த வழக்கில் தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க பரக்கத்துல்லாவுக்கு, இன்று முதல் வரும் 20ம் தேதி வரை அனுமதி வழங்கப்படுகிறது. இறுதிச் சடங்கில் பங்கேற்கும் அவர், அதிகாரிகளின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
The post விசாரணை கைதிகளின் உறவினர் மரணமடைந்தால் இறுதிச்சடங்கில் பங்கேற்க சிறைத்துறை அதிகாரிகளே அனுமதி அளிக்கலாம்: சுற்றறிக்கை வெளியிட தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் ஆலோசனை appeared first on Dinakaran.