கரூர் துயரச் சம்பவத்தின் சுவடுகள் மெல்ல மறைய ஆரம்பித்திருத்தாலும் அதனால் எழுந்த அரசியல் சர்ச்சைகள் இன்னும் அடங்கியபாடில்லை. மாறாக, நாளுக்கு நாள் அது புதுப்புது பரிணாமம் எடுத்துக் கொண்டிருக்கிறது.
கரூர் சம்பவத்தில் தவெகவையும் அதன் தலைவர் விஜய்யையும் சற்று காட்டமாகவே சாடிய நீதிமன்றம், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசுக்கும் சில கேள்விகளை எழுப்பியது. இதனிடையே, விஜய் மீது போலீஸ் வழக்குக் கூட பதிவு செய்யாதது ஏன் எனக் கேள்வி எழுப்பிய விசிக தலைவர் திருமாவளவன், “அப்படியானால் விஜய்க்கும் திமுகவுக்கும் உறவா?” என்று எசகுபிசகாய் கேள்வி எழுப்பினார். இதற்கு சுற்றி வளைத்துப் பதில் சொன்ன அமைச்சர் துரைமுருகன், “யாரையும் நாங்கள் தேவையில்லாமல் கைது செய்யமாட்டோம். விஜய் மீது தவறு என விசாரணையில் தெரியவந்தால் நடவடிக்கை எடுப்போம்” என்றார்.